“வாழ்வின் அத்தனை உணர்வுகளையும்
பகிர நீ
வேண்டும் என்னருகில்
வாழ்வின் அத்தனை நொடிகளையும்
கழிக்க வேண்டும் உன் மடியில்”
முதல் இரண்டு காதல்களை இழந்ததாலும், கீர்த்தனாவின் மீது இருந்த அதிகப்படியான நேசத்தாலும் என் வாழ்வின் எந்த
ஒரு முடிவிலும் அவளுக்கு பெரும் பங்கை கொடுத்தேன். ஒரு நாள் மேற்படிப்பை பற்றி
அவளிடம் கூறி அவள் கருத்தை கேட்க நினைத்தேன். இதுவே ஜெனியாக இருந்திருந்தால் நான்
இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருப்பேனா என்று தெரியவில்லை. அப்படியே நான்
கொடுத்திருந்தாலும் அதில் பயன் ஏதும் இல்லை. ஜெனிக்கு எப்போதுமே என்னை மட்டம்
தட்டுவது என்றால் திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது மாதிரி. எங்களின் பிரிவிற்கு
முக்கியமான காரணமே அது தான். கல்யாணமோ, காதலோ வாழ்க்கையின்
அடுத்தப் படிக்கு எடுத்த செல்ல வேண்டும். ஆனால் ஜெனியுடனா என் காதல் எனக்குள்
தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுமோ என்ற பயமே எனக்குள் இருந்தது. ஜெனியை
பிரிந்ததில் எனக்கு சிறிதும் வருத்தமே இல்லை.ரம்யாவும் எனக்கு எந்த ஒரு
விஷயத்திலும் பெரிதாக ஊக்கப்படுத்தியது இல்லை.
ஆனால் கீர்த்தனா என் வாழ்வின் சிறு முயற்சிகளிலும் பெரும் பங்களிப்பை கொடுத்த பொக்கிஷம்.
மேற்படிப்பை பற்றிய முடிவெடுக்க அன்று நாங்கள் மெரினாவின் கடற்கரையில்
சந்தித்தோம். மற்ற இளைய தலைமுறை காதலர்களை போல அடிக்கடி வெளியில் சுற்றுவதை
அனுமதிப்பவள் அல்ல கீர்த்தனா. எங்கள் காதல் மலர்ந்த பின் நாங்கள் வெளியில் செல்வது இதுவே முதல் முறை.
கீர்த்தனாவின் கண்ணியமான நடவடிக்கையும் அவளை ஈர்க்க காரணமானது.
“கடற்கரை மணலில் பெயர் எழுத
கல்லூரி காதல் இல்லை நம்முடையது
கல்லறை வரை செல்லும் காதல்
கல்வெட்டுக்களில் நிலைக்கும் நம் காதல்”
கடற்கரை மணலில் அமர்ந்து கடலையை கொரித்துக் கொண்டு நாங்கள் பேச ஆரம்பித்தோம்.
“ தாங்க்ஸ் கீர்த்தி. நான் முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னதும் தயங்காம
வந்ததுக்கு”.
“கார்த்தி. நமக்குள்ள எதற்கு தாங்க்ஸ், சாரி எல்லாம். சரி. ஏதோ முக்கியமான விஷயம் பத்தி பேசணும்னு சொன்னீயே.
என்ன அது?”
“ஆமா கீர்த்தி. இந்த விஷயத்துல நீ சொல்றத வச்சு தான் நான் முடிவெடுக்கனும்.
உனக்கே தெரியும். உன் விருப்பத்துக்கு நான் எவ்வளோ மதிப்பு கொடுக்குறேனு.”
“சொல்லு கார்த்தி. ஏதோ பெரிய விஷயம் போல.”
“ஆமா. நான் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லலாம் என நினைக்கிறேன். உன்னை
பிரிஞ்சு போறதை நினைச்சா கஷ்டமா தான் இருக்கு. ஆனாலும் இந்த மேற்படிப்பு நம்மை
லைஃப் ல அடுத்த நிலைமைக்கு கொண்டு போகும்னு நம்புறேன். நீ என்ன நினைக்கிற
கீர்த்தி.?”
“கண்டிப்பா கார்த்தி. நல்ல முடிவு தான். நீ போயிட்டு வா. தினம் தினம் ஆஃபிஸ் ல
பாத்துட்டு இருந்து பழகிட்டோம். கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும். எல்லாம் நம்ம
வாழ்க்கைக்காக தானா. ஆல் தி பெஸ்ட்.. விசா அப்ளை பண்ணிட்டியா கார்த்தி? “
“இல்லை கீர்த்தி. உன்னை கேட்டு முடிவு பண்ணிட்டு தான் அப்ளை பண்ணணும்னு
இருக்கேன். நாளைக்கே அப்ளை பண்ணிடுவேன்”.
“ஐ லவ் யு கார்த்தி. என்னோட முடிவுக்கு எவ்வளோ மதிப்பு கொடுக்கிற. நான்
அதிர்ஷ்டசாலி”.
“நானும் தான். நம்மோட லைஃப்க்கு சரியான முடிவை தான் நீ எடுப்பனு நான்
நம்புறேன் கீர்த்தி’.
“சரி. லேட் ஆயிருச்சு. கிளம்பலாமா.? நாளைக்கு ஆஃபிஸ் ல மீட் பண்ணலாம்.”
“சரி கீர்த்தி. போகலாம்”.
“கார்த்தி, கார்த்தி என்ன டா
அப்படி யோசனை?” என்ற அவன் அம்மாவின் குரல் அவன் சிந்தனையை
கலைத்தது.
“ஒண்ணும் இல்லை மா” என்று சமாளித்து நினைவிற்கு திரும்பினான். மறுநாள் கீர்த்தனா
அலுவலகத்தில் இல்லாததால் அவனுக்கும் செல்ல விருப்பம் இல்லாமல் விடுப்பு
எடுத்திருந்தான். அப்போது தான் அப்ளை
செய்து வைத்திருந்த அவன் விசா அழைப்பு வந்தது.பத்து நாட்களில் கிளம்ப
வேண்டியிருந்தது. இந்நேரம்
பார்த்து கீர்த்தனா வேறு ஊருக்கு சென்றிருந்தாள். என்ன செய்வது என்று அறியாமல்
கீர்த்தனாவின் அலைபேசியை அழைத்தான். அலைபேசி கீர்த்தனாவின் அறையில் தனியாக
அலறியது. 2,3 தடவை அழைத்தும் அவள் இணைப்பில் வரவில்லை.
கார்த்தி தன் அம்மா,அப்பாவிடம்
விசா பற்றி தெரிவிக்க அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கார்த்தியின் அப்பா “எப்போ டா
கிளம்ப போற?” என்று வினவ “இன்னும் 10 நாளில் கிளம்பலாம்னு
இருக்கேன் அப்பா” என்றான். வீட்டில் அவன் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக
நடந்தது. ஃப்ளைட் டிக்கெட் வாங்குவதற்கு
முன் கீர்த்தனாவை தொடர்பு கொள்ள முயற்சித்தான். அவளோ இணைப்பில் வரவே இல்லை. ஏன்
இப்பிடி தொடர்பு கொள்ளாமல் இருக்கிறாள் என்று தன்னை தானே குழப்பிக் கொண்டான்.

No comments:
Post a Comment