Monday 16 April 2012

விடாது காதல் பாகம் 2


ராஜா அனைத்து சமூக வலை தளத்திலும் தேடி கடைசியாக அவளை பேஸ்புக்கில் கண்டுபிடித்தான். அவள் பெயர் ஜான்சி. ராஜா இளநிலை பட்டப்படிப்பு படித்த போது அதே கல்லூரியில் வேறொரு துறையில் படித்தவள் அவள். இருவருக்கும் பழக்கம் இல்லாவிட்டாலும் அடிக்கடி பார்த்த முகம். ஆம்!! ஜான்சியின் மிக நெருங்கிய தோழி கவிதாவுக்கு ராஜா நெருங்கிய நண்பனாக இருந்தான். கவிதாவை சந்திக்க வரும் போது பார்த்திருக்கிறாள் அவனை.
நட்பு உறவாக ஏற்றுக்கொள்ளும்படி ஒரு அழைப்பும் அத்துடன் கவிதாவை பற்றிய தகவல்களை கேட்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். கல்லூரி படிப்பு முடிந்ததும் கவிதா, அனைத்து கல்லூரி தொடர்பையும் துண்டித்துவிட்டாள். அவள் நெருங்கிய தோழி ஜான்சியுடன் மட்டுமே தொடர்பில் இருந்தாள். கல்லூரி படிப்பு முடிந்ததும் சில மாதங்கள் கவிதாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் அவளை பற்றிய தகவல் ஏதும் அவனுக்கு கிடைக்கவில்லை. அத்துடன் அடுத்த கல்லூரி வாழ்க்கைக்கு வந்ததும் அவளை பற்றி தேடுவதை நிறுத்தி விட்டான்.
ஒரு நாள் தன் பழைய கல்லூரி நண்பனை சந்தித்த போது தான், கவிதா ஜான்சியுடன் மட்டும் தொடர்பில் இருக்கிறாள் என்று அறிந்து கொண்டான். ஆனால் அப்பொழுது அவளை தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை. மறுநாள் ஜான்சி தனது பேஸ்புக் கணக்கை பார்க்கும் பொழுது ராஜாவின் அழைப்பும், குறுஞ்செய்தியும் இருந்தது. அதை படித்த அவளுக்கு பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இதை போல கவிதாவின் பல நட்புக்கள் ஜான்சியின் உதவியையே நாடியது. ஆனால் இன்று வரை எந்த தகவலையும் கொடுக்க கவிதா சம்மதித்தது இல்லை.
அன்றும் ஜான்சி தன் தோழியை தொடர்பு கொண்டு ராஜாவின் குறுஞ்செய்தியை பற்றி கூறுகிறாள். வழக்கம் போல கவிதா யாரையும் தொடர்பு கொள்ள அனுமதிக்க வில்லை. ஜான்சியும் “கவிதா யாரையும் தொடர்பு கொள்ள விரும்பவில்லையாம். என்னால் அவளின் விருப்பம் இல்லாமல் அவளை பற்றிய தகவல்களை தர இயலாது. மன்னிக்கவும்” என பதில் அனுப்பினாள். நட்பு உறவு அழைப்பையும் அவளுக்காக தான் அனுப்பினான் என்று எண்ணி அவள் ஏற்று கொள்ளவில்லை.
ஜான்சியின் பதிலை படித்து தெரிந்து கொண்ட ராஜா தன் பழைய கல்லூரி வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறான். ஒரு நாள் கூட கவிதாவை சந்திக்காமல் இருந்தது இல்லை ராஜா. அவளும் அப்படி தான். இருவரும் வேறு வேறு துறையில் படித்தாலும் மிக நெருங்கி பழகியவர்கள். தங்கள் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டவர்கள். ஆனால் இப்பொழுது அவனை தொடர்பு கொள்ள கூட விரும்பாததை எண்ணி வியந்தான். அவனை அந்த பதில் பெரிதாக பாதிக்கவில்லை.. காரணம்??????
__ விடாது தொடரும்...

No comments:

Post a Comment