Wednesday 7 November 2012

ஜென்ம சாபம்


தேர்தல் நெருங்க நெருங்க மோகன்காந்தி மனதில் பதற்றமும், எதிர்பார்ப்பும் அதிகரித்தது. மீண்டும் மத்தியில் தன் ஆட்சியை நிலைநிறுத்த முடியாமல் போய் விடுமோ என்ற பயம் அதிகரிக்க தன் ஆஸ்தான சாமியாரை சந்தித்து தன் எதிர் காலம் பற்றி கேட்டு அறிய முடிவு செய்தான். மறுநாள் தன் முடிவின் படியே சத்யானந்தா சாமியாரை சந்தித்து தன் எதிர்காலம் பற்றியும், வரவிருக்கின்ற தேர்தல் பற்றியும் கேட்டான்.

“என்ன சாமி!! இந்த தேர்தலும் எனக்கு சாதகமாக தானே இருக்கிறது??”

“இல்லை. உன் ஆட்சி காலம் இத்துடன் முடிவடைகிறது.. இனி உன்னால் எப்போதும் ஆட்சியை பிடிக்க முடியாது”.
“என்ன சொல்றீங்க சாமி ??”

“ஆம். உன் பூர்வ ஜென்ம சாபம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.”

“சாபமா !! சாபம் முடிஞ்சா நல்லது தானே !!”

“உன் பூர்வ ஜென்ம கதையை சொல்கிறேன். முதலில் அதை பொறுமையாக கேள்”

“சரி சொல்லுங்க சாமி”.

“பூர்வ ஜென்மத்துல நீ ஒரு நாட்டோட அரசன். அப்போது உன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் முட்டாள்களாக , அடி மட்ட அறிவே இல்லாது உனக்கு உபத்திரவம் கொடுத்து வந்திருக்கின்றனர். நாளுக்கு நாள் உன் கோபமும், எரிச்சலும் அதிகமாகவே இந்த பிரச்சனையை தீர்க்க உன் நாட்டில் இருந்த ஒரு சக்தி வாய்ந்த முனிவரை சந்திக்க சென்றாய். உன் படையுடன் சென்று கடுந்தவத்தில் இருந்த முனிவரை தவம் கலையும்படி செய்ய அவர் கடும் கோபமுற்றார். 

முனிவர்: ”மதி இழந்த மன்னா!! எதற்காக என் தவத்தை கலைத்தாய்?”

மன்னன்: “மன்னிக்க வேண்டுகிறேன் முனிவரே. நான் வேண்டுமென்று எதையும் செய்யவில்லை. என் நாட்டு மக்களின் முட்டாள் தனமான செயல்களுக்கு அளவில்லாமல் சென்று விட்டது. அதற்கு ஒரு தீர்வு காணவே தங்களை காண வந்தேன்”.

முனிவர்: “உன் நாட்டு மக்களுக்கு மட்டும் அல்ல. உனக்கும் புத்தி என்பது சிறிதும் கிடையாது. இந்த ஜென்மம் மட்டுமில்லாமல் இனி வரும் அனைத்து ஜென்மங்களிலும் நீ நாடாளும் மன்னனாகவும், உன் நாட்டு மக்கள் முட்டாள்களாகவுமே இருப்பார்கள்.”

(சத்யானந்தா சாமியார் மனதில் – உனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சாணுக பாரு கண்டிப்பா இந்த நாட்டு மக்கள் முட்டாள் தான்). 

மன்னன்: “முனிவரே. தயவு கூர்ந்து தாங்கள் என்னை மன்னிக்கணும். தங்கள் தவம் கலைந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் இந்த சாபத்தில் இருந்து எனக்கு விமோசனம் தாருங்கள் முனிவரே.” 

முனிவர்: “என் சாபத்தின் பலனை நீ அடைந்தே தீர வேண்டும்”.

மன்னன்: “முனிவரே. தங்களை மன்றாடி கேட்கிறேன். என்னை மன்னித்து விமோசனம் தாருங்கள்.”

முனிவர்: “உன் கடைசி ஜென்மத்தில் மட்டும் ஐந்து ஆண்டுகளில் உன் சாம்ராஜ்யம் முடிந்து விடும். அதன் பின் உன் மக்கள் முட்டாள்களாக இருக்க மாட்டார்கள். இது தான் உன் சாப விமோசனம்”.

மன்னன்: ”இதற்கு வேறு வழியே இல்லையா முனிவரே?”

முனிவர்: “இதற்கு மேல் இங்கிருந்து என் கோபத்தை அதிகரிக்காமல் சென்று விடு.”

“இந்த சாபத்தின் படி இது தான் உன் கடைசி ஜென்மம். ஐந்து வருடங்களில் உன் ஆட்சியும் முடிந்தது என்றார் சத்யானந்தா” (நாட்டு மக்கள் இனியும் முட்டாள்களாக இருக்க மாட்டார்கள் என்று மனதில் நினைத்து கொண்டார்).

“இதுக்கு பரிகாரம் எதுவும் இல்லையா சாமி?” என்றான் மோகன் காந்தி.

“அதை நீ அந்த முனிவரை தான் போய் கேட்கணும்!!!”. 

சத்யானந்தா சொன்னது போல் மோகன் காந்தி’யின் கட்சி அந்த தேர்தலில் மிக பெரிய தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. சத்யானந்தா பெரிய சாமியார்’னு நீங்கலாம் நினைச்சிடாதீங்க. அவனும் ஒரு டூபாக்கூர் தான். ஜென்ம சாபம்’னு சொன்னதெல்லாம் அவன் அவிழ்த்து விட்ட புளுகு. 

எது எப்படியோ. முட்டாள் என்றும் முட்டாளாக இருக்க மாட்டான். அவனுக்கும் ஒரு நாள் அறிவு வரும். அந்த நாள்’ல அவனை முட்டாள் ஆக்குன எல்லாரும் வீழ்வாங்க. நம்ம நாட்டு மக்களை முட்டாள்களா நினைக்கிற எல்லா அரசியல்வாதிகளும் கடைசியில மக்களாலேயே வீழ்த்தப்படுவார்கள்.

No comments:

Post a Comment