Wednesday 1 August 2012

நேசத்தின் சுவாசம் - என் சினேகிதி


உன் காதல்
கடிதத்திற்கு
கூட கிடைக்கவில்லை
தனிமை...
நம் நட்பின்
பகிர்தலின் முன்.....

எத்தனை முறை
நீ முகம்
திருப்பி நின்றாலும்
கை கூப்பி
உன்னை வேண்டியிருக்கிறேன்...
எனக்காக அல்ல...
நம் நட்பின்
பிரிதலை
நீ தாங்க மாட்டாய் என்றே!!

எத்தனையோ முறை
நாம் பேசும்
அர்த்தமற்ற வார்த்தைகளை
எல்லாம் நகைச்சுவை
என்று நினைத்து புன்னகைத்திருக்கிறோம்..
புன்னகைக்கு காரணம்
வார்தைகள் அல்ல..
சினேகிதமே.....

தொலை தூர
பயணங்களில் எல்லாம்
சோர்வுற்ற என்னை
சேர வேண்டிய இடம்
சேர்த்தது
சேர்ந்திருந்த உன் கைகளே!!!!!

மழை விழும்
ஒவ்வொரு நாளும்
நினைத்து பார்க்கிறேன்
கல்லூரி நாளில்
ஒரு குடையில்
இருவர் நடக்கும்
நாட்களை...
நட்பில் நனைய
நமக்கு தேவைப்பட்டது
ஒரு குடை

கடற்கரையில்
படகுகளுக்கு இடையில்
ஒளிந்து பேசும்
அவஸ்தை இல்லை
நம் நேசதிற்கு...
அலைகளுடன்
நம் நட்பை
பகிர தடை
ஏதும் இல்லை

விடுமுறை என்றால்
கொண்டாட்டம் தான்
பிறருக்கு...
நட்பை தூர படுத்தும்
கல்லூரி தான்
எதிரி நமக்கு...

தோளில் சாய்ந்த
தோழனை
தோழமைலிருந்து பிரித்து
தோல்வியடையும் காதலாக
தோன்ற வைத்த சினிமாவை
தோற்கடித்தோம் நாம்......

அடித்து பிடித்து
ஒரே தட்டில்
உண்ட உணவிலும்
ஆளுக்கொரு வாய்
ஊட்டிக்கொண்ட உணவிலும்
அல்லவா
அறுசுவையை கண்டோம்....

கடற்கரை மணலில்
நாம் கட்டிய
நட்பு கோட்டையை
தகர்க்க வந்த
அலை கூட
நிதானித்து திரும்பியது
கடலுக்கே!!!

.

No comments:

Post a Comment